சென்னை கோயம்பேடு சந்தைக்கு வடமாநில தக்காளி வரத்து குறைவால்  சென்னை புறநகர் பகுதிகளில்  தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு  உயர்ந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்புவரை 5 கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனையான நிலையில் தற்போது அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதுஆந்திரா, கர்நாடகா மாநில தக்காளியை நம்பி தமிழகத்தில் வர்த்தகம் நடைபெறுகிறது.

சென்னையின் ஒரு நாள்  தக்காளி தேவை 1,200  டன்னாக உள்ள நிலையில் தற்போது 500 டன்  தக்காளி மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  வந்துள்ளது.

கோடை வெயில், அசானி புயல் போன்றவற்றால் தக்காளி  உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளதுதக்காளிகள் அழுகி நட்டம் ஏற்படுவதால் கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 1200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமாநிலங்களிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தக்காளியை கொண்டுவர வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும் புறநகர் பகுதிகளில் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in