மக்களுக்கு ஷாக்..!! தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்..!

மக்களுக்கு ஷாக்..!! தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்..!

Update: 2022-07-19 05:00 GMT

மின் துறையில் கடன் உயர்ந்துள்ளதாலும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தியதாலும் மின்கட்டணங்களை உயர்த்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 12,647 கோடி கடன் உயர்ந்துள்ள நிலையில், மின் கட்டணங்களை மாற்றம் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியதாகவும் இது தொடர்பாக 28 முறை கடிதங்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மேலும் மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடம் வாங்க வேண்டியது உள்ளதால் மின்கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. 42 சதவீதம் வீடு மற்றும் குடிசை மொத்த கட்டணத்தில் கட்டண மாற்றமில்லை 100 யூனிட் இலவச மின்சார திட்டத்திலும் மாற்றம் இல்லை. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு கொண்டு வரும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் மின் கட்டணம் குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துகளை கேட்டு அதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Similar News