திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தடராப்பட்டு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 400 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, 6-ம் வகுப்பில் சுமார் 20 மாணவ, மாணவியர் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அந்த வகுப்பறையின் மேல் தளம் விரிசல் ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக மேல் பகுதியில் இருந்த சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவர்கள் ஜனார்த்தனன், தருண் குமார், முகேஷ் மற்றும் வகுப்பில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களை மற்ற ஆசிரியர்கள் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மாணவர் முகேஷ் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அரசு பள்ளியின் மேல் தள சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.