அதிர்ச்சி தகவல்.. சட்டவிரோதமாக 269 பள்ளிகள்.. மாநகராட்சி அறிக்கை..!
அதிர்ச்சி தகவல்.. சட்டவிரோதமாக 269 பள்ளிகள்.. மாநகராட்சி அறிக்கை..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாஜக பிரமுகர் நித்தேஷ் ரானே அண்மையில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், உரிய அனுமதியின்றி பள்ளிகள் நடந்து வருவதாகவும், இதில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும், விரைவில் சட்டவிரோத பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், மும்பையில் நடப்பு கல்வியாண்டில் (2022 - 2023) நடத்திய ஆய்வின்படி 269 பள்ளிகள் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வருவது தெரியவந்தது. கடந்த கல்வி ஆண்டை பொறுத்தவரை 283 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 பள்ளிகள் மூடப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், 4 பள்ளிகள் தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் திறந்தவெளி பள்ளிகளில் இணைக்கப்பட்டது. இன்னும் 4 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதேபோல, மிராபயந்தர் மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 7 பள்ளிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.