இந்த பகுதிகளில் இன்று கடைகள் அடைப்பு!!
இந்த பகுதிகளில் இன்று கடைகள் அடைப்பு!!
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விசைத்தறிகள் அதிகம் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அதை தயாரிக்கும் தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கு போதிய கூலி வந்து சேருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதுதொடர்பாக தொடர் கோரிக்கைகள் முன்வைத்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தமிழக அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, பல்லடம் உள்ளிட்ட நான்கு சங்கங்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றன.
ஆனால் ஒப்பந்த வடிவில் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று சோமனூர் உள்ளிட்ட ஐந்து சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில் கடந்த 22ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டனர்.
ஆனால் அன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை என்பதால் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைத்தன. 23ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் சோமனூர் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
போராட்டம் அரசை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, பதுவம்பள்ளி, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, சாமளாபுரம், காரணம்பேட்டை, பருவாய் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு வியாபாரிகள், வணிகர்கள், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
newstm.in