தங்கைக்கு பாலியல் வன்கொடுமை.. புகார் அளித்த மனைவிக்கு அபராதம்.. கணவர் விடுதலை..!

தங்கைக்கு பாலியல் வன்கொடுமை.. புகார் அளித்த மனைவிக்கு அபராதம்.. கணவர் விடுதலை..!

Update: 2022-04-07 12:57 GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூத்துக்குளி அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரோகிணி. இவரது 16 வயது தங்கையை 2019 ஆகஸ்ட் 20-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மிரட்டி, பாண்டியன் பாலியல் வன்கொடுமை செய்ததாக ரோகிணி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல, 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 2019 மார்ச் மாதம் என இரண்டு முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து கேட்டபோது தனது தங்கையை வேறு யாருக்கேனும் திருமணம் செய்து வைத்தால், அவரைக் கொன்று விடுவேன் என தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இது தொடர்பாக நடந்த விசாரணையின்போது அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறினர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி, தனக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று கூறினார்.

இதனிடையே, தினந்தோறும் குடித்துவிட்டு வரும் கணவனை மிரட்டவே பொய் புகார் அளித்தேன் என்று பாண்டியனின் மனைவி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், கணவரை மிரட்டுவதற்காக பொய் புகார் அளித்த மனைவிக்கு போக்சோ சட்டத்தின் 22-வது பிரிவின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பாண்டியனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Similar News