நீட் தேர்வால் ஸ்ரீமதி உயிரிழப்பு.. முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு
நீட் தேர்வால் ஸ்ரீமதி உயிரிழப்பு.. முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு;
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார். எடப்படி பழனிசாமி இவரை அதிமுக பொருளாளராக நியமித்துள்ளார். இவர் எப்போதும் சர்ச்சை செயல்களுக்கும், பேச்சுகளுக்கும் பெயர் போனவர். ஆப்பிள் சின்னத்துக்கு இரண்டு முறை ஓட்டு கேட்டது, பழங்குடியின சிறுவனை செருப்பு மாட்டி விட சொன்னது, அம்மா எங்களுக்கு ஸ்வீட் கொடுத்தார் உள்ளிட்ட சர்ச்சை பேச்சுகளால் வைரலானவர்.
இந்த நிலையில், தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கலந்துகொண்டார்.
அப்பாது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் போன்ற அறிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். ஆனால் அதைப்பற்றி அதிமுக தொண்டர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ கவலை இல்லை. அவருக்கு கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
தொண்டர்களால் கோவிலாக மதிக்கப்படும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வதுண்டு. அதன்படி இந்த செயலில் ஈடுபட்ட நபர் மறுநாளே விபத்தில் சிக்கியதாக செய்தி வந்தது.
இதன்மூலம் அதிமுகவுக்கு யார்? தீங்கு செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆன்மா தண்டனை வழங்கும் என்றார்.
திமுக ஆட்சியில் சாமானிய மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வால் தோல்வி அடைந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின்பு சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், நான் மாற்றி கூறி விட்டேன். அவர் நீட் தேர்வால் உயிரிழக்கவில்லை என்று சமாளித்து பேசி தனது உரையை முடித்தார்.
newstm.in