மாமியார் தலையில் அம்மிக்கல்லால் போட்டுக் கொலைசெய்த மருமகன் !
மாமியார் தலையில் அம்மிக்கல்லால் போட்டுக் கொலைசெய்த மருமகன் !
மாமியாரை, மருமகனே அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (40). கணவனை பிரிந்து வாழும் கூலித்தொழிலாளியான இவருக்கு ஆர்த்தி (21) என்ற மகளும், வசந்தகுமார் (17) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ஆர்த்தியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் கார்த்தி என்பவர் ஒரு தலையாய் காதலித்து வந்தார். பிறகு கோகிலாவிடம் பெண் கேட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு மாங்குட்டை பாளையத்தில் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே திருமணமான ஒரு மாதத்தில் கார்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆர்த்தி கணவரை பிரிந்து கருவேப்பம்பட்டியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். எனவே கார்த்தி தனியாக வசித்து வந்தார்.
மனைவியை பிரிந்து மாங்குட்டைபாளையத்தில் தனியாக வசித்து வந்த கார்த்தி, எப்படியாவது மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என எண்ணி கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருவேப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு பின்பக்கத்தில் குடி வந்துள்ளார்.
இதையடுத்து தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய கார்த்தி, மாமியார் கோகிலா தடையாக இருப்பதாக கருதி சண்டையிட்டு வந்துள்ளார். அதேபோல் நேற்று மாலை சண்டை போட்டபோது ஆர்த்தி வேலை செய்துவரும் கடைக்குச் சென்று அழைத்து வர ஆர்த்தியின் தம்பி வசந்தகுமார் சென்றிருந்தார். இந்நிலையில் மாமியார் கோகிலா தலையில் அம்மிக்கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமியாரை கொன்றுவிட்டு வீட்டு வாசலில் கார்த்தி அமர்ந்திருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊரக போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியுடன் வாழ விடவில்லை என மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொன்ற சம்பவம் கருவெப்பம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in