மாமியார் மன்னிப்பால் மறுவாழ்வு பெற்ற மருமகன் !
மாமியார் மன்னிப்பால் மறுவாழ்வு பெற்ற மருமகன் !
மாமியார் மன்னித்ததால் மருமகன் 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கடந்த மே 25ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுப்பிரமணி சார்பில், மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகி விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரரின் மாமியார், தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். தங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டதால், மருமகனை மன்னித்து விட்டதாக தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதி, தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் குடும்ப பிரச்சனையில் உயர் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்பதால், மனுதாரரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
newstm.in