இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு தீவைப்பு..!!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு தீவைப்பு..!!;
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னும் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை. தற்போதும் பல நாட்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் அதிபர் மாளிகையை மக்கள் இன்று முற்றுகையிட்டதால் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தப்பியோடினார். இதனிடையே அசாதாரண சூழலின் மத்தியில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.
இத்தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமர் ரணில் வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவரது வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
இதனால் இலங்கையில் பதற்றம் நிலவுகிறது. பதவி விலகப்போவதாக ரணில் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அவரது வீட்டிற்கு தற்போது போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
Tense situation near Prime Minister Ranil Wickremesinghe's private house pic.twitter.com/hxavAFWwtc
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 9, 2022