உபி வரை ஸ்டாலின் அலையாம்.. காமெடி செய்கின்றனர்.. அண்ணாமலை விளாசல்..!
உபி வரை ஸ்டாலின் அலையாம்.. காமெடி செய்கின்றனர்.. அண்ணாமலை விளாசல்..!
பொள்ளாச்சியில், கோவை தெற்கு மாவட்ட பாஜக மாநாடு நடந்தது. மாநாடு மேடை, தமிழக சட்டசபை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
“பிரதமர் மோடி ஆட்சியில் எட்டு ஆண்டுகளில் 11 கோடி பேருக்கு வீடு, குடிநீர், கழிவறை என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்திலிருந்து சொத்து பங்கீடு வரையில் அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஓராண்டில் 6,600 மருத்துவப் பணியிடங்களை உருவாக்கியுள்ளோம். விவசாயிக்கு கவுரவம் கொடுத்துள்ளோம்; தமிழகத்தில், முத்ரா கடனில் 36 லட்சம் பேருக்கு சிறு, குறு கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கூட்டு பலாத்கார சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. கருமுட்டை விற்பனை என பல புதுவித குற்றங்கள் நடக்கின்றன.
மாநிலம் இப்படி இருக்கையில், உத்தரப்பிரதேசம் வரையில் ஸ்டாலின் அலை வீசுகிறது என காமெடி செய்கின்றனர். 2024-ல் இந்தியாவின் துணை பிரதமராகலாம் என கனவு காண்கின்றனர்.
பாஜக மத ரீதியான கட்சி என திமுக பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறது. ஸ்டாலின் முதல்வரான பின், 'நீட்' தேர்வுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். ஒன்பது மாதங்களாகியும் ஒரு முதல்வர் கூட பதில் கடிதம் போடவில்லை.
கோவையில், இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் மருத்துவம் படிக்கிறார். தேனியில் பூ விற்பனை செய்த பெண் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். திமுகவை தாண்டி வேறு யாரும் 'நீட்' தேர்வை எதிர்க்கவில்லை.
இல்லம் தேடி கல்வி திட்டம் மத்திய அரசு துவங்கி, 800 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு திட்டத்துக்கு திமுக பெயர் வைக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து அதற்கு புதிய பெயர் வைப்பதில் திமுக சிறந்து விளங்குகிறது.
பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை அறிந்து, கச்சத்தீவை மீட்போம் என திமுக நாடகமாடுகிறது. உலகின் படைகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
இதை முதல் இடத்துக்கு கொண்டு வரத்தான் அக்னிபத் திட்டம். பல பாதுகாப்பு படைப் பிரிவுகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது” என்று அண்ணாமலை பேசினார்.