கச்சத்தீவு திருவிழாவுக்கு அனுமதி.. மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்..!
கச்சத்தீவு திருவிழாவுக்கு அனுமதி.. மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்..!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4-ம் தேதி) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளது எமது கவனத்திற்கு வந்துள்ளது.
தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர்.
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவை பேணுவதை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.