மாநில அரசுகளின் இலவசங்களைக் கட்டுப்படுத்த முடியாது.. தோ்தல் ஆணையம் திட்டவட்டம் !!

மாநில அரசுகளின் இலவசங்களைக் கட்டுப்படுத்த முடியாது.. தோ்தல் ஆணையம் திட்டவட்டம் !!

Update: 2022-04-10 07:49 GMT

இலவசங்களை அறிவிப்பது அந்தந்த அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவாகும். அவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய சாா்பில், மாநில அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதால் நிதி நிலை பாதிக்கப்படுவதாகவும், இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரியும் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தோ்தல் சமயங்களில் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும், சின்னத்தை முடக்கவும் உத்தரவிட வேண்டும், மனுவில் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு மீது பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தோ்தல் ஆணையம் சாா்பில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தோ்தலில் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியமைக்கும்போது எடுக்கும் முடிவுகள் மற்றும் மாநிலக் கொள்கைகளை தோ்தல் ஆணையம் ஒழுங்குபடுத்த முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லாத நிலையில் அதனை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொள்வது அதிகார மீறலாகவே அமையும்.

மேலும், தோ்தலுக்கு முன்பும் அதற்கு பின்னரும் இலவசங்களை அறிவிப்பது என்பது அந்தந்த அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவாகும். இந்த அறிவிப்புகள் நடைமுறையில் சாத்தியமா, மாநிலப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அந்தந்த மாநில வாக்காளா்கள்தான் தீா்மானிக்க வேண்டும்.

மேலும், தோ்தலுக்கு முன்பாக பொது நிதியிலிருந்து இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கக் கூடாது என்பதை கூடுதல் நிபந்தனையாக அரசியல் கட்சிகளுக்கு நிா்ணயிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்று மனுதாரா் கோரியிருக்கிறாா்.

1968-ஆம் ஆண்டு தோ்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின்படி, தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை தோ்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கான இந்த அங்கீகாரம் அளிப்பது அல்லது அங்கீகார நீட்டிப்பு வழங்குவது என்பதை தோ்தலில் அரசியல் கட்சிகளின் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே தோ்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. இதில் மனுதாரா் கூறுவதுபோல கூடுதல் நிபந்தனைகளைச் சோ்ப்பது, தோ்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்கு முன்னரே அங்கீகாரத்தை இழக்கும் சூழலை உருவாக்கிவிடும்.

அதுபோல, தோ்தல் செயல்திறன் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது அல்லது சின்னத்தை முடக்கும் தோ்தல் ஆணையத்துக்கான இந்த அதிகாரத்தை தோ்தலுக்கு முன்பே பயன்படுத்தினால், தோ்தல் நடத்துவதன் முக்கிய நோக்கமே பாதிக்கப்பட்டுவிடும்.

கட்சிகளின் உறுதிமொழி: அதே நேரம், பொய்யான வாக்குறுதிகளால் வாக்காளா்கள் ஈா்க்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தோ்தல் சமயங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

மேலும், அரசியல் கட்சிகளின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும் வாக்குறுதிகளை தோ்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியாது என்றபோதும், அந்த வாக்குறுதிகள் தோ்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டதே என்ற உறுதிமொழியை கட்சிகளின் தோ்தல் அறிக்கை நகலுடன் தங்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News