வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு..!

வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு..!

Update: 2022-05-26 14:30 GMT

தூத்துக்குடி பெருமாள்புரத்தில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து, தாங்கள் பயின்ற வகுப்பறைகளை தங்களுக்கு பின்னர் வரும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்க விரும்பினர்.

இது குறித்து, தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து அவர்களின் ஒப்புதலோடு வகுப்பறை மற்றும் மேஜைக்கு வண்ணம் தீட்டுவது, மின்விசிறி வாங்கிக் கொடுப்பது, இருக்கைகளை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. மாணவர்களின் இந்த நற்செயல் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது. அத்துடன், பல்வேறு தரப்பினரும் மாணவர்களை பாராட்டினர்.

இது குறித்து தகவல் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணா மூர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “தமிழகத்தில் சமீப காலமாக, மாணவர் சமுதாயம் குறித்து மக்கள் மனதில் பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.

மாணவர்கள் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, தாக்க முற்படுவது, இருக்கைகளை உடைப்பது, போதை பொருட்களை அருந்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செயல்கள் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் போலீசாரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

ஆனால், அதற்கு நேர்மாறாக தூத்துக்குடி பெருமாள்புரத்தில் உள்ள பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளனர். தலைமை ஆசிரியராகிய நீங்களும், உங்களது சிறந்த முயற்சியால் ஏற்கனவே மாணவ சமுதாயத்தின் மேல் இருந்த ஒரு தவறுதலான கருத்தை மாற்றி உள்ளீர்கள்.

அந்த வகையில் நீங்கள், இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், நல் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கருவியாகவும் செயல்பட்டு உள்ளீர்கள். இந்தச் செயல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாணவனின் மனதையும் தொடும் என்று நம்புகிறேன். இந்தச் செயலில் ஈடுபட்ட ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Similar News