ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் போராட்டம்.. சென்னை மெரினாவில் பரபரப்பு..!
ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் போராட்டம்.. சென்னை மெரினாவில் பரபரப்பு..!
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும், ஒற்றை தலைமை தற்போது அவசியமில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். ஒற்றை தலைமை தற்போது அவசியம் இல்லை’ என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நண்பகல் 1 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்யும் சூழலில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஜெயலலிதா நினைவிடம் முன்பாக 50க்கும் மேற்பட்ட சென்னை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து நாளை பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து 1 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக மெரினா கடற்கரை மற்றும் ஜெயலலிதா நினைவிடம் அருகே காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.