செய்தியாளர்களை சந்தித்து கண்ணீருடன் நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்..!!
செய்தியாளர்களை சந்தித்து கண்ணீருடன் நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்..!!;
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான அவர், இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகப் பரிமாணங்களைப் கொண்டவர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு அவர் குணம் அடைந்து வந்தாலும் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வுக்காக இருந்தார். அவரது உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் டி.ராஜேந்தர் விரைவில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு அமெரிக்கா சென்று டி.ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து டி.ராஜேந்தர் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இன்று இரவு 9.30 மணி விமானத்தில் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார். குடும்பத்தினரும் அவருடன் செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதித்து டி.ராஜேந்தருக்கு சிகிச்சைகளை தொடர்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது. நான் எனது வாழ்வில் இந்த இடத்தில் வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு எல்லாம் வல்ல இறைவன் மீது வைத்துள்ள நம்பிக்கையே. இறைவன் கொடுத்த அருளால் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன். விதி, இறைவனை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.