மேற்குவங்கத்தில் தமிழக ராணுவ வீரர் சுட்டுக்கொலை !!
மேற்குவங்கத்தில் தமிழக ராணுவ வீரர் சுட்டுக்கொலை !!
நாகை மாவட்டம் கீழையூர் அச்சுக்கட்டளையை சேர்ந்தவர் ஞானசேகரன்(45). இவர் 1998ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். தற்போது மேற்கு வங்காளம் முசிராபாத்தில் உள்ள 144 பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஞானசேகரன், உடன் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் டோப்போ ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். பணியின்போது, ஞானசேகரன், ஜான்சன் டோப்போ ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக பட்டாலியனில் பணியாற்றும் சகவீரரான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர், ஞானசேகரன் மனைவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து முழுமையான தகவல் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் ஞானசேகரனுக்கு ரோஸ்கில்டா என்ற மனைவி, தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மகள் ஜெனிகா, 10ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஜெனிஸ் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஞானசேகரன் வீட்டுக்கு வந்து சென்றதாகவும், நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் செல்போனில் பேசியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் ஞானசேகரன் உடலை சொந்த ஊருக்கு விரைவில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘
இதனிடையே, பணியில் இருந்தப்போது ஞானசேகரனும், ஜான்சன் டோப்போவும் முன்விரோத தகராறில் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
newstm.in