தமிழகம் கேட்டது ரூ. 6,230 கோடி.. ஒன்றிய அரசு கொடுத்தது ரூ. 816 கோடி..

தமிழகம் கேட்டது ரூ. 6,230 கோடி.. ஒன்றிய அரசு கொடுத்தது ரூ. 816 கோடி..

Update: 2022-02-11 05:20 GMT

வெள்ளச் சேதத்தை ஒன்றிய குழுவினர் கடந்த நவம்பர் கடைசி வாரம் பார்வையிட்டு சென்ற நிலையில் அதன் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசு நிதி உதவியை விரைவில் அளிக்குமா?" என்று பிப்ரவரி 8-ம் தேதி மக்களவையில் ஆ.ராசா, பாரிவேந்தர், ராமலிங்கம், கனிமொழி ஆகிய உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்டிருந்தனர்.

இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், “பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் முதன்மையான பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே உள்ளது. இயற்கை சீற்றங்களின் போது மாநில அரசுகள் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திலிருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சாதாரணமான இயற்கை சீற்றங்கள் என்றால் உடனடி நிதி உதவிகளும், கடுமையான இயற்கை சீற்றம் என்றால் ஒன்றியக் குழு பார்வையிட்டு அதன் அடிப்படையிலான கூடுதல் நிதி உதவிகள் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

2021 அக்டோபர் நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மழை பொழிவு வெள்ளச் சேதம் பற்றி மதிப்பீடு செய்ய ஒன்றிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நவம்பர் 21 முதல் 24-ம் தேதி வரை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது.
முதலில் தமிழ்நாடு அரசு வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக ரூ. 2,629.29 கோடி நிவாரணத் தொகையாக கேட்டது. அதில் ரூ. 549.63 கோடி உடனடி நிவாரணமாகவும் மீதமுள்ள ரூ. 2079.66 கோடி நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காகவும் கேட்டது.

ஒன்றிய குழுவின் தமிழ்நாடு வருகையின்போது மாநில அரசு 2வது முறையாக ஒரு முறையீட்டு மனுவை அளித்தது. அதில் ரூ. 4,625 கோடி நிவாரணமாக கேட்டது. 1,070 கோடி ரூபாய்களை தற்காலிக நிவாரணப் பணிகளுக்காக ரூ. 3,554 கோடி நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காகவும் தமிழ்நாடு அரசு கோரியது.

இந்நிலையில், 21-12-2021 அன்று தமிழ்நாடு மாநில அரசு மூன்றாவதாக ஒரு முறையீட்டு மனுவை அளித்தது. அதில் திருத்தி அமைக்கப்பட்ட நிதி உதவியாக ரூ. 6,230.45 கோடி நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதில் ரூ. 1,510.83 கோடி உடனடி நிவாரணத்துக்காக ரூ. 4,719.62 கோடி நிரந்தர மறுசீரமைப்புக்காவும் தமிழ்நாடு அரசு கேட்டது.

இதற்கிடையே ஒன்றிய குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டுக்கான கூடுதல் நிதி உதவிகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடுக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ. 1,088 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 816 கோடி ஒன்றிய அரசின் பங்காகவும் ரூ. 272 கோடி மாநில அரசின் பங்காக இருக்கும். ஒன்றிய அரசின் பங்கான ரூ. 816 கோடி தலா ரூ. 408 கோடி என இரண்டு தவணைகளாக விடுவிக்கப்பட்டுள்ளது” என்று பதில் அளித்துள்ளார்.

Similar News