கட்டண கொள்ளை.. ஏப்ரலில் மட்டும் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் இழப்பு !!

கட்டண கொள்ளை.. ஏப்ரலில் மட்டும் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் இழப்பு !!

Update: 2022-06-19 08:00 GMT

தொலைபேசி கட்டண உயர்வு காரணமாக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் 70 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

அண்மையில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்கள் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். அதன் பிரதிபலிப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அதாவது, கட்டண உயர்வு காரணமாக 70 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டுகளை ரீசார்ஜ் செய்வதை தவிர்த்துள்ளனர்.

இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய இழப்பாகும். இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டுகளை ரீசார்ஜ் செய்வது பெருமளவு குறைந்தது. இரண்டு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், கட்டண உயர்வு காரணமாக ஒரு போன் எண்ணை மட்டும் பயன்படுத்தத் தொடங்கியது இந்த சரிவுக்குக் காரணமாகும்.

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களைவிட ஜியோ மிகக் குறைவாக 1 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது. பார்தி ஏர்டெல் 30.10 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 30.80 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.  

ஏப்ரல் மாத வாடிக்கையாளர் விவர பட்டியலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதேசமயம், ஏப்ரல் மாதத்தில் புதிதாக வாடிக்கையாளர்கள் விகிதம் அதிகரித்துள்ளது. ஜியோவில் 17 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் வட்டம் 40.60 கோடியை எட்டியுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தில் 8 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 36.10 கோடியை எட்டியுள்ளது. வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 லட்சம் சரிந்ததில் அதன் வாடிக்கையாளர் அளவு 25.90 கோடியாக குறைந்துள்ளது. ஜியோ 1 லட்சம், பார்தி ஏர்டெல் 30.10 லட்சம், வோடபோன் ஐடியா 30.80 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

newstm.in
 

Similar News