ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு மறுப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !!

ஆசிரியைக்கு பேறுகால விடுப்பு மறுப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !!

Update: 2022-03-26 06:33 GMT

மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பி.கோலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் உமாதேவி, மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அரசாணைப்படி இரு குழந்தைகளுக்கு மட்டும் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் எனக் கூறி, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உமாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த மனுவில், தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில் அவர் மூலமாக இரு குழந்தைகள் பிறந்ததாகவும், விவாகரத்துக்கு பின் இரு குழந்தைகளும் முதல் கணவரிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், ராஜ்குமார் என்பவரை மறுமணம் செய்துள்ள நிலையில் தற்போது பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே இரு குழந்தைகளும் அரசுப் பணியில் சேரும் முன் பிறந்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். எனவே, பேறுகால விடுப்பு வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், மகப்பேறு பலன்களைப் பெறுவதற்காக குழந்தைகளின் எண்ணிக்கையில் மத்திய சட்டம் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத வரை, வேறு எந்த விதியும் அல்லது விதிமுறைகளும் அத்தகைய கோரிக்கைக்கு எந்த தடையையும் விதிக்க முடியாது என்று தெரிவித்தார். எனவே, மனுதாரருக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தாய்மையின் முக்கியத்துவத்துவம் மற்றும் ஆழமான புரிதலாலும் புதிதாகப் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய மாநில அரசை இந்த உயர்நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News