திருமணமான ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை!!
திருமணமான ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை!!
தருமபுரி மாவட்டம் பாலகோட்டில் திருமணமான ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கம்பியூட்டர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்த அரசகுமாருக்கும், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த மகேஷ்வரிக்கும் (25) கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
கடந்த வாரம் தம்பதியினர் இருவரும் பாலக்கோட்டில் உள்ள மகேஷ்வரியின் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தனர். தொடர்ந்து, வேலை தொடர்பாக அரசகுமார் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.பணி முடிந்த நிலையில், பாலக்கோடு வந்தார்.
அப்போது, மகேஷ்வரியின் அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அரசகுமார் மற்றும் குடும்பத்தினர் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தனர். அப்போது, மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மகேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மகேஷ்வரியின் தாய் பூங்கொடி அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒன்றரை மாதத்தில் மகேஷ்வரி உயிரிழந்ததால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
newstm.in