பதற்றம்.. வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ரவுடி கொலை !!

பதற்றம்.. வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ரவுடி கொலை !!

Update: 2022-07-23 09:55 GMT

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (22). அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்கள் பாலாஜி (எ) பாலகிருஷ்ணன் (21), சத்தியவாசகன், பட்சி (எ) தினேஷ்குமார் உள்ளிட்ட 8 பேருடன் தனது வீட்டில் பன்னீர்செல்வம் மது குடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. அந்நேரத்தில் பைக்குகளில் திடீரென்று வந்த ஜான்டி (எ) செந்தில்நாதன் என்பவர் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்தது. அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது சரமாரியாக வீசியது. பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.

இதில் பன்னீர்செல்வம், அவரது கூட்டாளிகள் பாலகிருஷ்ணன்(21), சத்தியவாசகன், தினேஷ்குமார் ஆகியோர் சிக்கிக்கொண்ட நிலையில் மற்ற 4 பேர் தப்பியோடினர். இதனை பயன்படுத்திய அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அக்கும்பல் தப்பியோடியது.

காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். மற்ற மூவரும்  சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

முதற்கட்ட விசாரணையில் பன்னீர்செல்வம் தலைமையிலான கும்பலுக்கும், ஜான்டி (எ) செந்தில்நாதன் தலைமையிலான கும்பலுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் உள்ளது. அப்பகுதியில் இவர்களில் யார் பெரியவர் என்பதில் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் விரோதம் வலுத்த நிலையில், ஜான்டி (எ) செந்தில்நாதன் தலைமையிலான கும்பல் பன்னீர்செல்வத்தை கொலை செய்திருப்பது தெரியவந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். 


newstm.in
 

Similar News