இலங்கையில் தொடரும் பதற்றம்.. ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு..!

இலங்கையில் தொடரும் பதற்றம்.. ராஜபக்சே சகோதரர் வீட்டிற்கு தீவைப்பு..!

Update: 2022-05-10 17:51 GMT

இலங்கையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் மூண்டது.

கலவரத்தில், ஆளுங்கட்சி எம்பி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியாகினர். மஹிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த பிரச்னையில் 7 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. நிலைமை கைமீறி போனதை அடுத்து, மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

பதவி விலகிய மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையறிந்த போராட்டக்காரர்கள், கடற்படை தளத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரச்னைக்கு காரணமான அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷம் போட்டு வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News