பிலிப்பைன்சின், அப்ரா மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிலிப்பைன்சில், கடந்த 1990-ம் ஆண்டு 7.7 என்ற அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.