சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றது.

ஆனால், எதிர்பாராத விதமாக லாரி மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியதில், பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பேருந்தின் ஒரு பகுதி அப்படியே உருக்குலைந்தது. 


இந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 6ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றது. மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பேருந்து அதிவேகமாக இயக்கியதே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
newstm.in