பட்டப்பகலில் பயங்கரம்.. திமுக பிரமுகர் வெட்டிக்கொலை.. எடப்பாடி அருகே பரபரப்பு..!
பட்டப்பகலில் பயங்கரம்.. திமுக பிரமுகர் வெட்டிக்கொலை.. எடப்பாடி அருகே பரபரப்பு..!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கன்னியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (55). திமுக மாவட்ட பிரதிநிதியான இவர், ஏற்கனவே கோணசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
கந்தனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்ன பையன் மற்றும் மணிகண்டன் குடும்பத்தினருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், இன்று காலை கன்னியாம்பட்டி அருகே உள்ள தேஞ்சான்வளவு என்ற பகுதியில் நடந்துவந்த கந்தனை வழிமறித்த சின்ன பையன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும், அவரிடம் நிலம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சின்ன பையன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கந்தனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சாலையில் சாய்ந்த கந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கந்தன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கந்தனின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார், தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.