அது, என் தவறுதான்.. ஒப்புக்கொண்டார் பிரதமர்..!

அது, என் தவறுதான்.. ஒப்புக்கொண்டார் பிரதமர்..!

Update: 2022-04-23 11:10 GMT

அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

இதற்காக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், ரம்புக்கெனாவில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்; 13 பேர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு மகிந்த ராஜபக்சவை அழைக்காதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து மகிந்த ராஜபக்சே நாடாளுமன்றத்தில் கூறியதாவது: “ரம்புக்கெனா துப்பாக்கிச் சூடு குறித்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நான்தான் கலந்து கொள்ளவில்லை. அது என் தவறுதான். அன்று மாலை அந்த சம்பவம் குறித்து என்னிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது” என்றார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச சீன பிரதமர் லீ கெகியாங் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இலங்கைக்கு உதவி செய்வதாக லீ கெகியாங் உறுதி அளித்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்திய ரூபாய் மதிப்பில் 3000 கோடி பெறுவதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரியில் காலாவதியானது. இந்நிலையில், இக்கடனை திரும்பத் தருவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இலங்கை அரசு கடந்த வாரம் அன்னிய கடன்களை திரும்பத் தருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதையடுத்து, முதன் முதலாக இலங்கைக்கு கடன் தவணையை நீட்டித்து இந்தியா சலுகை வழங்கியுள்ளது.

Similar News