காருக்கு பெட்ரோல் நிரப்ப பங்கில் 2 நாட்களாக காத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் !!

காருக்கு பெட்ரோல் நிரப்ப பங்கில் 2 நாட்களாக காத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் !!;

Update: 2022-07-16 10:27 GMT

நடப்பு ஆண்டு ஆகஸ்டில் ஆசிய கோப்பை 2022 போட்டிகளை இலங்கை நடத்த உள்ளது. ஆனால், அந்நாடு இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கை மக்கள் தொகையில் சராசரியாக தினசரி 10 சதவீதம் மக்களே எரிபொருள் பெற முடிவதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நெருக்கடி ஒருபக்கம் என்றால், நாடு முழுவதும் மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பல மாதங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. 

போராட்டம் முற்றியதில், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். அவர் நாட்டைவிட்டு தப்பியோடினார். எனினும்,  தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் அவதிப்பட்டது பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே வேதனையை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, எரிபொருள் பற்றாக்குறையால், என்னால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட போக முடியவில்லை. 2 நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காரில், நீண்ட வரிசையில் காத்திருந்தேன். அதிர்ஷ்டவசத்தில் எரிபொருள் கிடைத்து விட்டது என கூறியுள்ளார். 

கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எரிபொருள் பற்றாக்குறையால் என்னால் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை. 2 நாட்களுக்கு பின்பு ரூ.10 ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளேன். இது 2ல் இருந்து 3 நாட்களுக்கு தான் இது போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சமிகா கருணாரத்னே 2019ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். 

 



newstm.in

Tags:    

Similar News