உக்ரைன் பற்றி எரிவதற்கு அமெரிக்கா தான் காரணம்! களத்தில் இறங்கிய வட கொரியா!

உக்ரைன் பற்றி எரிவதற்கு அமெரிக்கா தான் காரணம்! களத்தில் இறங்கிய வட கொரியா!

Update: 2022-02-28 07:03 GMT

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா தான் முதல் காரணம் என்று வடகொரியா கருத்து தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் வடகொரியா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அதில், ரஷியா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம்  என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி ஜி சாங்கின் இணையதளத்தில் அமெரிக்காவை குற்றஞ்சாட்டி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு, ரஷ்யா தனது பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்தது. உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியாயமானதே.

ரஷ்யாவின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் செவி சாய்க்கவில்லை. அமெரிக்கா நேட்டோ வாயிலாக மறைமுகமாக தனது ராணுவ பராக்கிரமத்தை நிறுவ முயன்றது. அமெரிக்காவின் இந்த ஆணவப் போக்கும், தேவையற்ற மத்தியஸ்தமும் தான் உக்ரைன் பிரச்சினைக்கு வித்திட்டது.

அமெரிக்கா இரட்டைக் கொள்கையுடன் செயல்பட்டு உக்ரைன் போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு அமைதி, ஸ்திரத்தன்மை என்ற போர்வையில் அவற்றை தவறாக வழிநடத்துகிறது. ஆனால், இன்று தாக்குதல் என்ற நிலை வந்தவுடன் அந்த உக்ரைனுக்கு ராணுவ உதவி ஏதும் வழங்காமல் கைவிட்டுவிட்டது. உலகளவில் அமெரிக்க ஆதிக்க காலம் கடந்துவிட்டது.

உக்ரைன் மீது தாக்குதல் நடைபெற அமெரிக்கா தான் காரணம். இதிலிருந்து சிறிய நாடுகள் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் பலம் இல்லாவிட்டால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும் என்பதே அது. அதுதான் இந்தத் தாக்குதலின் முக்கியக் கருத்தும் கூட, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags:    

Similar News