காதலியை கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன்!!
காதலியை கொன்றுவிட்டு நாடகமாடிய காதலன்!!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 4 மாதங்களாக மஞ்சுளா - சந்தோஷ் குமார் ஆகிய இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ் குமார் காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்திய போது முகம் மற்றும் கழுத்து பகுதியில் நக காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சந்தோஷ் குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தோஷ் குமார் மஞ்சுளாவை கொலை செய்து துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து கொலை வழக்காக மாற்றி சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மஞ்சுளா(23) தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமார்(21) அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் தஞ்சாவூர் பகுதியில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த போது காதல் மலர்ந்ததும் தெரிய வந்தது.
இருவரும் சென்னைக்கு வந்து சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.3000 ஆயிரம் வாடகையில் குடியேறினர். இருவரும் தங்களை அக்கா தம்பி என்றும் வீட்டில் வறுமை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் பணியாற்றி வந்த நிலையில் சந்தோஷ்குமார் மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா பெங்களூரில் பணிபுரியும் தனது முன்னாள் காதலரிடம் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.
பிரச்னை அதிகமாகி சந்தோஷ்குமார் மஞ்சுளாவை கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தோஷ் குமாரை கைது செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in