வரியை 5% உயர்த்தியது மத்திய அரசு.. எகிறும் தங்கம் விலை !!

வரியை 5% உயர்த்தியது மத்திய அரசு.. எகிறும் தங்கம் விலை !!

Update: 2022-07-01 17:15 GMT

தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியதால் இந்தியாவில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இருநாடுகளை தாண்டி பல நாடுகளில் இதன் தாக்கம் உணரப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக வர்த்தகத்தை தடை செய்துள்ளன. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 79 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. அந்த வகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் பொருட்டு தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தங்கம் இறக்குமதி வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வரி உயர்வானது ஜூன் 30ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதேபோல், தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2.5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும். கடந்த பட்ஜெட்டில் தங்கம் விலை 7.5 சதவீதம் குறைத்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபுறம் இருக்க, இந்தியா முழுவதும் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

newstm.in
 

Tags:    

Similar News