மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் 10,000 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள்,  இண்டஸ்ட்ரீஸ், மொத்த தண்ணீர் சப்ளையர்கள்,  நகர்ப்புற பகுதியில் அரசு தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப்  ஹவுசிங் சொசைட்டிகள், அப்பார்ட்மெண்டுகளுக்காக குடிநீர் பயன்பாடு உட்பட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்திற்கு புறம்பாக  கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது  என்று தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

நில நீர் பாதுகாப்பு,  நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவிய நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.