4ஆவது திருமணத்துக்கு பள்ளி மாணவியை கடத்திய ஓட்டுநர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் !!
4ஆவது திருமணத்துக்கு பள்ளி மாணவியை கடத்திய ஓட்டுநர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் !!
ஏற்கனவே 3 முறை திருமணமான பள்ளி வாகன ஓட்டுநர் அடுத்த திருமணத்துக்கு 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாப்பம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, கடந்த 21 தேதி முதல் காணவில்லை. பள்ளிக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் பல இடங்களில் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது குறித்து ஓட்டுனர் கார்த்திக்கிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் எந்த தகவலும் போலீசாரால் பெற முடியவில்லை.
ஆனால், அந்தப் பள்ளி வாகன ஓட்டுநர் கார்த்திக் உதவியுடன் அதே பள்ளியில் ஓட்டுநராக உள்ள அஜித் என்பவர், ஆசை வார்த்தை கூறி அவருடைய இருசக்கர வாகனத்தில் மாணவியை கடத்திச்சென்றார் விசாரணையில் அம்பலமானது. அதன்பிறகு, கடத்தலுக்கு உதவியாக இருந்த ஓட்டுனர் கார்த்திகை கடந்த 31 ஆம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சேலம், ஏற்காடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் அஜித்தை தேடிவந்த நிலையில் பெங்களூருவில் அரூர் உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரிடம் அஜித் பிடிபட்டார். பின்னர், அஜித்திடம் இருந்து மாணவியை மீட்ட போலீசார், அவரை அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிளவந்தன. ஓட்டுநர் அஜித், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். அவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஓட்டுநரை கைது செய்து எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய மூன்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. எனவே பள்ளி மாணவிகள் மீது மாவட்ட நிர்வாகம் தனி அக்கறை கொண்டு, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் பெற்றோர்களும் தங்களின் குழைந்தைகள் மீது கவனம் செலுத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in