பிரபல நடிகர் ராம்சரண் ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் பாதுகாவலர் ஒருவருக்கு மருந்துபொருட்கள் அனுப்பி உதவியுள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ஆர்ஆர்ஆர். பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், ஆர்ஆர்ஆர்’ படத்தின் சில காட்சிகள் உக்ரைன் மற்றும் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது. இதற்காக படக்குழுவினர் சில நாட்கள் உக்ரைனில் தங்கியிருந்தனர். அந்த வகையில், உக்ரைனில் நடிகர் ராம்சரண் தங்கியிருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் உக்ரைனைச் சேர்ந்த ரஸ்டி.

இதனிடையே, ரஷ்யா- உக்ரைன் இடையே சண்டை மூண்டுள்ள நிலையில் ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஸ்டி குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதும் ரஸ்டியை பற்றி கவலையடைந்த ராம் சரண், அவரைத் தொடர்புகொண்டு அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்துள்ளார். 

அப்போது, தனது மனைவியின் உடல்நிலையை பற்றி குறிப்பிட்ட ரஸ்டி, நிலைமை கைமீறி வருவதாகவும் தனது மனைவிக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியவில்லை என்பதை தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது ரஸ்டி மனைவிக்கு தேவையான மருந்து பொருட்களுடன், பண உதவியும் ராம் சரண் செய்துள்ளார். 

இந்த உதவியை பெற்றது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஸ்டி, அதில் ராம்சரணுக்கு நன்றிகூறும் விதமாக.. என் மனைவிக்கு உதவ ராம் சரண் மருந்துகளை அனுப்பியுள்ளார். மேலும் சில அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பியுள்ளார். இந்த உதவிக்கு எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அவருக்கு நன்றி கூறுகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.



newstm.in

Tags: