நள்ளிரவு பூஜை மர்மம்! சாமியாரின் வீட்டில் நடந்தது என்ன?

நள்ளிரவு பூஜை மர்மம்! சாமியாரின் வீட்டில் நடந்தது என்ன?

Update: 2022-02-26 09:09 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது. தந்தை ராமச்சந்திர ரெட்டியார் மறைந்த பிறகு அந்த இடத்தில் ஆசிரமம் கட்டி முனுசாமி நடத்தி வந்துள்ளார்.

பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இங்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து முனுசாமியின் தோட்டத்தில் வேலை, கோயில் வேலை, முனுசாமியின் கை, கால் அமுக்கிவிடும் வேலையும் செய்து வந்துள்ளனர்.

இந்த ஆசிரமத்தில்தான் மாணவி ஹேமமாலினி தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் மாவட்டம் சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - நிர்மலா தம்பதியினர் தங்களது மூத்த மகள் ஹேமமாலினிக்கு (20) ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாக குறிகேட்க கடந்த ஆண்டு வந்தனர்.

அப்போது முனுசாமி ஹேமமாலினிக்கு தோஷம் இருப்பதாகவும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தன்னுடனே தங்கி பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இரவு நேர பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கல்லூரிக்கு சென்று வந்த ஹேமமாலினியை அடிக்கடி ஆசிரமத்துக்கு அழைத்து வந்து பூஜையில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி முனுசாமி கேட்டுக்கொண்டதன் பேரில் ஹேமமாலியை அழைத்து சென்றனர்.

பின்னர் பூஜை முடிந்த பிறகு அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு கோயிலில் உறங்க சென்றனர். அப்போது, ஹேமமாலினியை மட்டும் தனது வீட்டு அறையில் தூங்கும்படி சாமியார் முனுசாமி கேட்டுள்ளார். பாதுகாப்பாக இருக்கும் என நினைத்த உறவினர்கள் ஹேமமாலினியை அவரது தங்கையுடன் அனுப்பி வைத்தனர்.

அதிகாலை ஹேமமாலினி வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே, சாமியாரின் மனைவி உறவினர்களிடம் ஓடி வந்து, ஹேமமாலினி பூச்சி மருந்தை குடித்துவிட்டதாக தெரிவித்தார். என்ன நடந்தது என்று ஹேமமாலினியிடம் கேட்டபோது, அவர் முனுசாமியை கை காட்டியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமமாலினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய சாமியார் முனுசாமியை கைது செய்து இப்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி எதனால் விஷம் சாப்பிட்டார், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மகளை ஒரு சாமியாரின் கட்டுப்பாட்டில் விட பெற்றோர் எப்படி சம்மதித்தனர், மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முனுசாமி ஏன் முயற்சி செய்யவில்லை என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.

newstm.in

Similar News