தமிழகத்தில் அடுத்த கொடூரம்.. காதலனை கட்டிப்போட்டு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை
தமிழகத்தில் அடுத்த கொடூரம்.. காதலனை கட்டிப்போட்டு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், வேலூர் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது, அங்குவந்த 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டுவிட்டு அந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது காதலியிடம் இருந்து நகை, பணத்தையும் திருடி சென்றனர்.
பின்னர் காதலர்கள் வீடு திரும்பியதாக தெரிகிறது. எனினும் தனது காதலில் கூட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளானதால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தனக்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டிஸ்பி-யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளான 3 பேரையும் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மூவரும் கமுதி, திருச்சுழி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது குற்றவாளிகள் தாக்கியதில் சிறப்பு எஸ்.ஐ நவநீதகிருஷ்ணன் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in