அரசியலில் அடுத்த பரபரப்பு.. ஈபிஎஸ் - ஓபிஎஸ் உடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு..!
அரசியலில் அடுத்த பரபரப்பு.. ஈபிஎஸ் - ஓபிஎஸ் உடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு..!
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் சலசலப்புடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
அதுபோல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்று, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை அவர்களின் வீட்டில் சென்று சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த சந்திப்பின் போது ‘ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு தர வேண்டும். நாளை ஜனாதிபதி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக தலைவர்கள் கட்டாயம் டெல்லிக்கு வரவேண்டும்.
வேட்புமனு தாக்கலின் போது உடனிருக்க வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.