கன்னத்தில் கிள்ளிய கணக்கு வாத்தியார்.. போக்சோவில் கைது செய்த போலீசார்..!
கன்னத்தில் கிள்ளிய கணக்கு வாத்தியார்.. போக்சோவில் கைது செய்த போலீசார்..!
தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் சேரன் (50) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்புக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மாணவி ஒருவர் நோட்டில் கணக்கு போட்டு ஆசிரியர் சேரனிடம் காண்பித்துள்ளார்.
மாணவி கணிதத்தை தவறாக போட்டிருந்ததால் ஆசிரியர் சேரன் அந்த மாணவியை வகுப்பில் இருந்த சக மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டியுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் சேரன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் சேரன் வகுப்பறையில் மாணவியின் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டியது உண்மை எனத் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கணித ஆசிரியர் சேரனை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மாணிவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.