தாயை கொன்று வீட்டிற்குள் புதைக்க முயன்ற மகன்!!
தாயை கொன்று வீட்டிற்குள் புதைக்க முயன்ற மகன்!!
திருவள்ளூர் அருகே தாயை கொலை செய்து வீட்டுக்குள் புதைக்க முயன்ற மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா (48) – ஆனந்தன் தம்பதி குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், மகள் மற்றும் பெரிய மகன் ராம்தாஸ் ஆகியோருக்கு திருமணம் முடிந்த நிலையில் அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.
கணவரும் வெளியில் தங்கிவிட தாய் மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மல்லிகாவின் 2ஆவது மகன் ஜெயபால் வீட்டிற்கு வந்தார். அப்போது தாய் மல்லிகா, வேலைக்கு போகாத ஜெயபாலை திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜெயபால், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மல்லிகாவை வீட்டிற்குள்ளேயே புதைப்பதற்காக குழி தோண்டிய நிலையில், ஜெயபால் சோர்வில் தூங்கி விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் ராமதாஸ் பார்த்து கேட்டபோது, தாயை கொன்று விட்டதாகவும் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மல்லிகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து ஜெயபாலை கைது செய்தனர்.
newstm.in