காமெடியை நிஜமாக்கிய டீக்கடைக்காரர்.. 65 ரூபாய்க்கு ஒட்டகப் பாலில் டீ போட்டு அசத்தல்..!
காமெடியை நிஜமாக்கிய டீக்கடைக்காரர்.. 65 ரூபாய்க்கு ஒட்டகப் பாலில் டீ போட்டு அசத்தல்..!
‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில், துபாய்க்கு சென்று திரும்பிய நடிகர் வடிவேலு ஒரு டீக்கடையில் தனக்கு ஒட்டகப் பாலில் டீ போடுமாறு கேட்டு ஊழியரை தாக்குவது போன்ற ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும்.
ஆனால், திண்டுக்கல்லில் உண்மையிலேயே ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் சையது இப்ராஹிம்ஷா என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.
வழக்கமாக தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புது விதத்தில் தேநீர் வழங்க முடிவு செய்தார். அதன்படி ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், “தமிழகத்தில் கோவை, திருப்பூர் போன்ற ஒரு சில நகரங்களில் ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல்லில் முதன் முறையாக ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்து வருகிறேன். ஒட்டகப் பாலில் போடும் டீ ஒன்று ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டகப்பால் புரதச்சத்து, கலோரி ஆகிய சத்துக்களை கொண்டது. தாய்ப்பாலை விட சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும், ஆண்மை விருத்திக்கு உதவும் என்பதால் பெரும்பாலான ஆண்கள் இதனை வாங்கி பருகி வருகின்றனர். தற்போது திண்டுக்கல் நகரில் ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.