தலைவனுக்கு வந்த சோதனை.. வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று.. கடுமையான கட்டுப்பாடுகள் !!
தலைவனுக்கு வந்த சோதனை.. வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று.. கடுமையான கட்டுப்பாடுகள் !!;
உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை வடகொரியாவில். இதனை உலக நாடுகள் வியப்பாக பார்த்துவந்தன. அதேநேரத்தில் அங்கு தொற்று பரவியதாகவும் தகவல் பரவியது. எனினும் அதுக்கு வடகொரியா மறுப்பு தெரிவித்தது.
கொரோனா கடும் பாதிப்பில் இருந்தபோது வடகொரியா மட்டுமல்லாமல் 15 நாடுகளில் யாரையும் தாக்கவில்லை. அதாவது வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கெரோனா தாக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. ஆனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக, சீனாவில் வேகமெடுத்துள்ளது. தென்கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவல் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வட கொரியாவில் முதல் கோவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 2020 ஆம் ஆண்டின் இறுதியில் வட கொரியா 13,259 கொரோனா சோதனைகளை நடத்தியது. ஆனால் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது.
இந்த நிலையில், தற்போது பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் வைரஸின் மிகவும் பரவக்கூடிய ஒமைக்ரான் மாறுபாட்டுடன் கூடிவை என தெரிவித்தது. இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா பரவல் குறித்து விவாதிக்க பொலிட்பீரோ கூட்டத்தை நடத்தினார். இதில் அதிகாரிகளும் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அவசரகால நெருக்கடியை அமல்படுத்துவதாக அறிவித்தார். கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் மாவட்டங்களிலும் உள்ள கொரோனா பகுதிகளை தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அனைத்து வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்படும், நோய் பரவுவதைத் தடுக்க ஒவ்வொரு பணிப் பிரிவும் தனிமைப்படுத்தப்படும், எனக் கூறினார்.
கொரோனா தொற்று உறுதியானவர் என்னவானார் என்று தெரியவில்லை.
newstm.in