மது போதையில் தூங்கியவர்களுக்கு எமனாக வந்த ரயில்..!!

மது போதையில் தூங்கியவர்களுக்கு எமனாக வந்த ரயில்..!!

Update: 2022-06-11 12:18 GMT

தூத்துக்குடி 3வது  மைல் பசும்பொன் நகரில் வசித்து வருபவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20). இவருக்கு திரு.வி.க நகரை சேர்ந்த சு.மாரிமுத்து (23) மற்றும் பணகுடி சேர்ந்த ஜெபசிங் (23) ஆகிய இரு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் நேற்று காலையில் நடந்த ஒரு நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் இரவு 10 மணி அளவில் தூத்துக்குடி 3வது மைல்  மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதை அதிகமானதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் எழுந்திருக்க முடியாமல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்தது.

இன்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திராவிற்கு சரக்கு ஏற்றிச் சென்ற ரயில் இவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்தில் மாரிமுத்து என்ற பெயர் கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தண்டவாளத்தின் அருகில் தூங்கியதால் ஜெபசிங் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

தகவல் அறிந்து சம்வப இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், தூத்துக்குடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், மற்றும் ரயில்வே போலீசார் 2 சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெபசிங் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ரயில் விபத்தில் பலியான சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து மீது தூத்துக்குடி தெற்கு மற்றும் சிப்காட் காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News