தன்னை அடித்தபோது தாங்கிய மனைவி, மகனை அடித்ததால் கணவனை வெட்டிக்கொன்றார் !!
தன்னை அடித்தபோது தாங்கிய மனைவி, மகனை அடித்ததால் கணவனை வெட்டிக்கொன்றார் !!
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் மகாதேவன்(53) - அமுதா (37) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப தலைவரான மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு போதையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் மனைவியை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.
இவ்வாறு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு செய்து மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மனைவியிடம் சண்டைபோட்டு பணம் வாங்கிக் கொண்டு குடித்துள்ளார் மகாதேவன். மேலும் இரண்டு பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தட்டிக்கேட்டதால் மனைவியிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகராறில் மூத்த மகன் ராஜராஜ சோழன், அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். இதனை தடுத்த மனைவியை அவர் அரிவாளால் வெட்ட முயன்றபோது, ஆத்திரம் அடைந்த மனைவி அமுதா அரிவாளை பிடுங்கிய கணவனை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்தார்.
பின்னர் தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று கணவனை கொன்று விட்டதாக சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in