இனி இந்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது.. ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !!
இனி இந்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது.. ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !!
நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக ஓடியாடி விளையாடிய காலம் மாறி தற்போது ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் தனியாக விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் பெருகிவிட்டது. இதனால் நீண்ட நேரம் செல்போனையே உற்றுபார்ப்பதாலும் ஏற்படும் பாதிப்பு ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் பண இழப்பு, அதனால் மனஉளைச்சல், தற்கொலை போன்றவைகளும் நடைபெறுகிறது.
அந்த வகையில், அண்மைக்காலமாக ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம் என்றே கூறலாம். எளிய மக்கள் முதல் காவல்துறையினர், தொழிலதிபர் என பலரும் ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக்கொண்டனர். அதாவது, சொந்தப் பணத்தை இழந்தது ஒருபுறம் கடன் வாங்கி பணத்தை இழந்தது மறுபுறம் என மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த காலங்களில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சற்று பின்னோக்கி பார்த்தால் அதிர்ச்சியடைய வைக்கிறது.
பல நாடுகளில் சூதாட்டத்திற்கு அனுமதி இருக்கும்போதிலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதியில்லை. ஐக்கிய அரபு அமீரகம், வட கொரியா, ஜப்பான், கம்போடியா, கத்தார் ஆகிய நாடுகள் சூதாட்டத்தை தடை செய்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பறிபோகும்நிலையில், இதனை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் நாட்டில் பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் எழுந்திருப்பதால் அனைத்து வகை ஊடகங்களுக்கும் மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை ஆன்லைன் சூதாட்டம் என்பது ஒரு சட்ட விரோத செயல் எனவும், மேலும் ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துவதால் இது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி சமூக வலைதளங்கள், இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
newstm.in