வந்தார்கள் சென்றார்கள்.. இந்தியாவுக்கு பாடம் எடுத்த இங்கிலாந்து அணி !!
வந்தார்கள் சென்றார்கள்.. இந்தியாவுக்கு பாடம் எடுத்த இங்கிலாந்து அணி !!;
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி லார்ட்ஸில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன் அலி 47 ரன், டேவிட் வில்லே 41 ரன், ஜேனி பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்தனர்.
இந்தியா சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்த இலக்கை இந்திய அணி எளிதாகவே எட்டிவெற்றிபெறும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால், ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் தவான் 9 ரன்னிலும், விராட் கோலி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். விராட் கோலி 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
கடைசி நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 27 ரன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தலா 29 ரன், ஷமி 23 ரன் எடுத்து ஓரளவுக்கு இந்தியாவுக்கு உதவினர். இறுதியில், இந்தியா 146 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் டோப்லே 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்திய வீரர்கள் சில மோசமான ஷாட்களை தேர்வு செய்து அடித்ததே தங்கள் விக்கெட்களை பறிகொடுக்க காரணமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமனில் உள்ளது. இறுதி மற்றும் 3வது ஒருநாள் போட்டி 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
newstm.in