இவர்கள், தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
இவர்கள், தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!;
திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகள், தங்களது சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணமாகாத தாய் மற்றும் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இந்த சமூகத்தில் மரியாதை, தனிநபர் உரிமை, சுதந்திரத்தோடு வாழ வகை செய்யும் வகையில், பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்ஹி கிருஷ்ணன் கடந்த 19-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், திருமணமாகாத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் இந்நாட்டு குடிமகன் தான்.
எனவே, அவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் எந்த ஒரு உரிமையையும் நிராகரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
திருமணமாகாத பெண்கள் மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் இந்த நாட்டில் சுதந்திரம், மரியாதை, தனிநபர் உரிமையோடு வாழ முழு தகுதி உண்டு.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் குறுக்கிட முடியாது. அவ்வாறு நடந்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும்.
திருமணமாகாத ஒரு பெண்ணுக்கு பிறந்த மகனின் மூன்று ஆவணங்களில் தந்தை என்ற இடத்தில் மூன்று வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், அந்த நபரின் பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற இடத்தில் இருக்கும் பெயரை நீக்குமாறும், தாயின் பெயரை சேர்த்து பெற்றவரில் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று விண்ணப்பித்தால் அதை நிறைவேற்றிக் கொடுக்குமாறு பிறப்பு / இறப்பு பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் ஒரு நபர், அவருக்கு மட்டும் மகன்/மகள் அல்ல, இந்த மிகச் சிறந்த இந்திய நாட்டின் மகன் / மகளும் ஆவார் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.