பள்ளிகளில் இதை நடத்தலாம்.. பச்சைக்கொடி காட்டியது கல்வித்துறை..!

பள்ளிகளில் இதை நடத்தலாம்.. பச்சைக்கொடி காட்டியது கல்வித்துறை..!;

Update: 2022-07-27 13:41 GMT

இரண்டு ஆண்டுகளுக்கு பின், பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் மற்றும் விளையாட்டு நாள் விழாக்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு தோறும் ‘ஸ்போர்ட்ஸ் டே’ கொண்டாடப்படுவது வழக்கம். இதில், மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மாணவர்களின் தனித்திறன்களை அறிந்து, அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு, கலை மற்றும் கலாச்சார போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

அதன் பின்னர் ஆண்டு விழா நடத்தப்பட்டு, தனித்திறன் மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ - மாணிவியருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் தொடங்கியதால் இது போன்ற விழாக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கவில்லை.

இந்த ஆண்டு ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளதால், பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் மற்றும் விளையாட்டு நாள் விழாக்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

மார்ச் மாதம் நடத்தப்படும் ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, இந்த விழாக்களை டிசம்பர் மாதத்திற்குள் முடித்துக் கொள்ளுமாறு பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு பயம் போக்கவும், மதிப்பெண் குறித்த மன அழுத்தமின்றி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த விழாக்களுக்கு அனுமதி அளிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News