விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இந்த கல்லூரி மாணவன் சிறந்த உதாரணம்..!!

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இந்த கல்லூரி மாணவன் சிறந்த உதாரணம்..!!

Update: 2022-05-24 04:30 GMT

பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் வசித்து வருபவர் வைகுந்தம்-தேவி தம்பதியினர். இந்த தம்பதிக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதுநிலை இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் எடுத்து வந்த முயற்சியில் தற்போது மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து கார்த்திக் கூறுகையில், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் மட்டும் 37 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும், உலகம் முழுவதும் 360 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் உருவாகிறது. இவற்றில் 8.7 சதவீத கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

எனவே, இயற்கை இடர்பாடுகளை உருவாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி பெட்ரோலுக்கு மாற்றாக எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக, பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் எடுக்கும் முயற்சி வெற்றி அடைந்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஒரே தரத்தில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை மட்டும் பிரித்து அவற்றின் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்களை எரிப்பதன் மூலம் 300 மி.லி. பைராலிஸிஸ் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதில் 10 சதவீத முழுமையான ஆல்கஹாலை சேர்த்தால் வாகனத்தின் இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

தற்போது, பரிசோதனை நிலையில் உள்ளதால் தயாரிக்கப்படும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. அதேவேலையில் இதனை அதிகளவில் உற்பத்தி செய்யும்போது, பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வரும் எரிவாயுவை சமையலுக்கும், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து அதன் மூலம் இறுதியாக கிடைக்கும் மட்டு எனப்படும் கழிவுகளை சாலை அமைப்பதற்கும், கட்டிடங்களுக்கான கான்கிரீட் போடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் தற்போதைய பெட்ரோலின் விலையை விட குறைவான விலைக்கு பைராலிஸிஸ் பெட்ரோலை விற்பனை செய்ய முடியும் என்றும் தன் முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெட்ரோல் வாகன எஞ்சினை எவ்விதத்திலும் பாதிக்காது என்று கூறினார்

மேலும், அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் ஒன்றாக கலக்காமல் தரம் பிரித்து தனித்தனியாக எடுக்கப்படும் பெட்ரோலில் 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கும், 4 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கும் என இரண்டுவிதமான தரத்தில் பெட்ரோல் கிடைக்கிறது. இந்த முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்க வேண்டும். இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News