தூத்துக்குடியில் பரபரப்பு.. கடலில் குதித்து தொழிலாளர்கள் போராட்டம்..!
தூத்துக்குடியில் பரபரப்பு.. கடலில் குதித்து தொழிலாளர்கள் போராட்டம்..!
பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொழிலாளர்கள் கடலில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த சரக்கு கப்பல்களில் காற்றாலை பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்தது.
அப்போது, அந்த கப்பலின் கேப்டன், கப்பலை வெளியே அனுப்ப கயிற்றை அவிழ்த்து விடுமாறு தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இன்று வேலை நிறுத்தம் என்பதால் வேலை செய்ய மாட்டோம் என்றனர்.
இதனை தொடர்ந்து தொழிற்பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 தொழிலாளர்கள் கடலில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.