ஆனந்த யாழை மீட்டிய கவிஞருக்கு இன்று பிறந்த நாள்..!
ஆனந்த யாழை மீட்டிய கவிஞருக்கு இன்று பிறந்த நாள்..!;
நல்ல நல்ல பாடல் வரிகளை தமிழ் திரையுலகுக்கு கொடையாக கொடுத்த வள்ளல்களில் ஒருவரான கவிஞர் நா.முத்துக்குமாரின் 47-வது பிறந்த தினம் இன்று.
கடந்த 1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி, காஞ்சிபுரத்தில் பிறந்தவர் நா.முத்துக்குமார். 1999-ம் ஆண்டு விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படத்தில் இடம்பெற்ற ‘உன் பேர் சொல்ல ஆசைதான்…’ என்ற பாடலை எழுதி தமிழ்த் திரையுலகில் பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து, ‘காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘கில்லி’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘கஜினி’, ‘புதுப்பேட்டை’, ‘சிவாஜி’, ‘கல்லூரி’, ‘யாரடி நீ மோகினி’, ‘அயன்’, ‘அங்காடித் தெரு’, ‘பையா’, ‘மதராசபட்டினம்’, ‘பில்லா-2’, ‘தங்கமீன்கள்’, ‘ராம்’, ‘சைவம்’, ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்…’ பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.
அடுத்தபடியாக, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய ‘எல்லாம் அழகு…’ பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார்.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் 7 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய நா.முத்துக்குமார், கவிஞர் என்பதையும் தாண்டி, அஜித்தின் ‘கிரீடம்’ மற்றும் சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான பாடல்களையும், எண்ணற்ற நூல்களையும் எழுதியுள்ள கவிஞர் நா.முத்துக்குமார், கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார்.
நல்ல நல்ல பாடல் வரிகளை தமிழ் திரையுலகுக்கு கொடையாக கொடுத்த வள்ளல்களில் ஒருவரான கவிஞர் நா.முத்துக்குமாரின் 47-வது பிறந்த தினம் இன்று.
இதனை முன்னிட்டு, தமிழ் சினிமா ரசிகர்கள் அவருடைய பாடல் வரிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.